தமிழகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மத்திய பட்ஜெட்: வேல்முருகன் கண்டனம்
சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக எதுவும் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகாலத்தில் நிதி நிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதா? அதன் முன்னேற்றம் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. உணவுப் பொருட்கள் விற்பனையில் 100% அன்னிய நேரடி முதலீடு என்பது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கிற மறைமுக வஞ்சகமாகும். இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

அதே நேரத்தில் வேளாண்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். நீர்ப்பாசன திட்டத்துக்கும் மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கின்ற போதும் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வாக எதுவுமே முன் வைக்கப்படவில்லை. நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிற நதிநீர் இணைப்பு குறித்து மவுனியாக இருக்கிறது மத்திய நிதி நிலை அறிக்கை.
குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த ஒரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளவே இல்லை. அதேபோல் புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரியை இன்னமும் கடுமையாக உயர்த்தி அந்த பொருட்கள் விற்பனைக்கு முழுமையான தடையை கொண்டுவந்திருக்க வேண்டும்.
உயர் கல்விக்காக ரூ.1,000 கோடி நிதியம், முத்ரா கடன் வங்கி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என்பது போன்றவை வெறும் ஏட்டளவில் இருந்துவிடாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? எந்த அளவுக்கு இதில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதும் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிப்பதுதான் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துகிற ஒரு அரசின் அடிப்படை கடமை.
ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியதாக இருப்பினும் அது சாத்தியம்தானா? உரிய பயனாளிகளுக்குத்தான் இது சென்றடைகிறதா? என்பதை உறுதிப்படுத்துகிற செயல்திட்டமும் அவசியமானதாகும்.
இவைகளுக்கு அப்பால் மாநிலங்களுக்கு பயன்தரக் கூடிய திட்டம் என்று எதுவுமே இல்லாத ஒரு நிதிநிலை அறிக்கையாகத்தான் இது இருக்கிறது. மாநிலங்களின் கோரிக்கைகளைப் பற்றிய பரிசீலனைகள் எதுவும் இல்லாமல் மத்திய அரசு தனக்கான ஒரு நிதி ஒதுக்கீட்டு அறிக்கையாக இதனை உருவாக்கி இருக்கிறது.
வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.25,000 கோடியை தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால் வெறும் ரூ2,000 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. தற்போதைய நிதி நிலை அறிக்கையிலும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்புமே வெளியிடப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட மாநில மக்களின் உரிமைகளை உணர்வுகளை மதிக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதையே இது வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு விவசாயிகள், ஏழை மக்களுக்கான ஒரு அரசு; தொழில்வளர்ச்சிக்கும் பாடுபடுகிறது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் வகையில்தான் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இவ்வாறு வேல்முருகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications