வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுப்பதா?: எச். ராஜாவுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர் தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று திமிராகப் பேசியதும் இதே எச். ராஜா தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியுடன் சேர்ந்து கொக்கரித்ததும் இதே எச். ராஜா தான்!
பொதுக்கூட்டமானாலும் ஊடக சந்திப்புகளானாலும் விவாதக் களங்களானாலும் நா கூசாமல் பொய்யையும் புரட்டையும் அநாகரிக வார்த்தைகளையும் கொட்டி தமிழர் சுயமரியாதையை சீண்டுவதையே தன் 'வாழ்நாள்" கொள்கையாகக் கொண்டிருக்கிற எச். ராஜா, மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களைப் பார்த்து "நாவடக்கம்" தேவை என்று பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவதாகத் தான் இருக்கிறது.
அத்துடன் "வைகோ தமது நாவை அடக்காவிட்டால் அவரது நாக்கை அடக்குவது எப்படி என்பது ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும்" என்றும் மிரட்டியிருப்பது வைகோ அவர்கள் மீது வன்முறையை ஏவிவிடும் வகையில் பாஜக தொண்டர்களைத் தூண்டிவிடுவதாகத்தான் இருக்கிறது.
இத்தகைய கொலை மிரட்டல்களுக்கு தமிழர் வாழ்வுரிமைக்குப் போராடுகிற எவரும் அஞ்சிவிடமாட்டோம் என்பதை எச். ராஜா நினைவில் கொள்ள வேண்டும்.
தன்னுடைய இந்த போக்கை எச். ராஜா நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரின் போராட்டங்களை எச். ராஜா எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.