நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர்... துணை போவோரை மக்கள் சும்மா விடமாட்டார்கள்.. வேல்முருகன்
அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநருக்கு துணை போவோரை தமிழக மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கூறியுள்ளது.
சென்னை : அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு என்பது அத்துமீறல் மட்டுமே அல்ல; அது அரசமைப்புச் சட்டத்துக்கே எதிராக, தெரிந்தே செய்யும் குற்றம். இதற்குத் துணைபோவோரையும் கூட தமிழக மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : ஆளுநர் என்பவர் யார்; அவருக்குண்டான பொறுப்பு, அதிகாரம் மற்றும் அவற்றிற்கான வரம்பு ஆகியவை என்ன என்பதை அரசமைப்புச் சட்டம் வரையறுத்துச் சொல்லியிருக்கிறது.
அதன்படிதான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும்; அப்படி செயல்படாத பட்சத்தில் நாடு அதற்கான எதிர்வினையையும் ஆற்றிவந்திருக்கிறது.
வரலாறு இப்படியிருக்க, தமிழ்நாட்டிற்கு இப்போது ஆளுநராக வந்திருக்கும் பன்வாரிலால் புரோகித் அவர்கள், ஆளுநருக்குரிய பொறுப்பு மற்றும் அதிகார வரம்பினைத் தாண்டி அரசு நிர்வாகத்தில் தலையீடு செய்திருக்கிறார்.

திட்டமிட்டு தான் செயல்படுகிறார்
முதல் நாள் கோவையில் வரம்பை மீறி இவர் நடத்திய கலந்தாய்வினை தமிழகமே ஒன்று சேர்ந்து கண்டிக்கிறது; ஆனால் அதைக் கண்டுகொள்ளத் தயாரில்லாமல், வீம்புக்கு மறுநாளும் அங்கே ஆய்வில் ஈடுபடுகிறார். அப்படியென்றால் வேண்டுமென்றே திட்டமிட்டபடிதான் செயல்படுகிறார். ஆளுநர் என்பவர் யார்; அவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரம், பொறுப்பு மற்றும் அவற்றிற்கான வரம்பு பற்றியெல்லாம் தெரியாத குழந்தையல்ல இவர்.

பின்னணியில் மத்திய அரசு
பழுத்த, மூத்த, அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் இப்படிச் செய்கிறார் என்றால் அது தன்னை நியமித்த மேலிடத்தின் கட்டளைப்படியே நடந்துகொள்கிறார் என்பதுதான் பொருள். இதனை பாஜக நியாயப்படுத்துவதிலிருந்தே அவர்களின் மத்திய அரசுதான் இவருக்குப் பின்னால் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

தப்பு செய்கிறவர்கள்
தமிழக ஆட்சியாளர்களும் இதை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தப்பு செய்கிறவர்களாகவும் அதன் மூலம் மடியில் பெருங் கனம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்றுதான் பொருள். எனவே அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு என்பது அத்துமீறல்.

மக்கள் விடமாட்டார்கள்
அதுமட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கே எதிராக, தெரிந்தே செய்யும் குற்றமாகும்! இதற்குத் துணைபோவோரையும்கூட தமிழக மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications