உயிரை வாங்கும் ஆவிதான் காவி என்பது தெரிந்தே அனிதாவைப் பலியிட்டனர் பாவிகள்.. வேல்முருகன்
அரியலூர் மாணவி அனிதாவை தெரிந்தே பலியிட்டு விட்டனர் பாவிகள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நீட் தேர்வால் மருத்துவ கனவு நிறைவேறாது என்ற விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள்; மருத்துவ கட்ஆஃபில் இது 196.75. தனது வாழ்க்கைக் கனவு மற்றும் குடும்பத்தின் கனவு நிறைவேறியாச்சு;

எம்.பி.பி.எஸ் சீட் உறுதி என்ற மகிழ்ச்சியிலிருந்த மாணவியை பேரிடியாய்த் தாக்கியது "நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!" என்ற அந்த துரோகச் செய்தி. "நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார் அனிதா.ஆனால் தீர்ப்பு எதிராகவே ஆனது.
இந்நிலையில் அனிதா "தற்கொலை செய்துகொண்டார்" என்ற செய்தி வந்து தாக்குகிறது. ஆனால் நாம் நம்பவில்லை. இது தற்கொலை இல்லை. இல்லவே இல்லை. "நீட்"டை நுழைத்த மோடி சாமிக்கு பூசாரி எடப்பாடி கொடுத்த நரபலி! அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் சண்முகத்தின் மகள் அனிதா. சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார். உயிரை வாங்கும் ஆவிதான் காவி என்பது தெரிந்தே அனிதாவைப் பலியிட்டனர் பாவிகள்! அனிதாவுக்கும் அவரது எளிய குடும்பத்திற்கும் தனது கண்ணீரைக் காணிக்கையாக்குகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!, என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications