மோடி அரசு நியமித்த சர்வாதிகார ராஜகுருதான் நிதி ஆயோக்.. வேல்முருகன் தாக்கு
சென்னை: தான்தோன்றித்தனமாக சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி அரசு நியமித்துக் கொண்ட ராஜகுருதான் "நிதி ஆயோக்" என்பது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பணருட்டி தி. வேல்முருகன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
"திட்டக் கமிஷனை" ஒழித்திடவே உருவாக்கிய இந்த "நிதி ஆயோக்", சமூக நீதியையே ஒழித்துக்கட்ட, "தனியார் துறையில் இடஒதுக்கீடு கூடாது" என்கிறது!
அரசமைப்புச் சட்டத்திற்கே முரணான இந்தக் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன் நிதி ஆயோக்கை எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி சொன்னது வேறு; பிரதமர் ஆகி அவர் செய்துகொண்டிருப்பது வேறு. "வளர்ச்சி"தான் தனது குறிக்கோள் என்று சொல்லி வாக்கைப் பெற்றவர், இன்று நாட்டை "தளர்ச்சி" அடையச் செய்யும் நடவடிக்கைகளையே மேற்கொள்கிறார்.
அந்த நடவடிக்கைகள் யாவுமே ஜனநாயகம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதிக்குப் புறம்பானவை. தான்தோன்றித்தனமாக, சர்வாதிகாரத்தனமாக எடுத்த அந்த நடவடிக்கைகள் கார்ப்பொரேட்டுகளுக்கே ஆதரவானவை; வெகுமக்களுக்கு எதிரானவை.
அதில் பண மதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் சொல்லப்பட்ட அவற்றின் நோக்கங்களுக்கே நேர் எதிரான உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டவை. அதுதான் சர்வாதிகாரிகளின் சாணக்கிய அரசியல்; அட்டையாய் ஒட்டி இரத்தம் உறிஞ்சும் சுரண்டல் அரசியல்; ஏய்ப்பு அரசியல்.
இந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார் மோடி. அத்தகைய திட்டங்களை நிதி ஆயோக் மூலம் பரிந்துரைக்கச் செய்திருக்கிறார். அதற்காகத்தானே திட்டக் கமிஷனை ஒழித்து நிதி ஆயோக்கை அமைத்தார்! அது அவர் இட்ட கட்டளைப்படி நடக்கிறது!
அந்தப்படிதான் நிதி ஆயோக் "தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது" என்று மோடிக்கு பரிந்துரைத்திருக்கிறது.
நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜீவ்குமார்தான் இந்தப் பரிந்துரையைச் செய்திருக்கிறார். "எக்காரணத்தைக் கொண்டும் தனியார் துறை நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது; அப்படி அனுமதித்தால் அது பல்வேறு தடைகள் மற்றும் சிக்கலை ஏற்படுத்தும். பணியாளர்களின் வேலைத்திறனைக் குறைத்துவிடும்; முதலீடுகள் வரத்தைத் தடுத்துவிடும்" என்று சொல்லியிருக்கிறார் அவர்.
நிதி ஆயோக்கின் இந்தக் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதற்கு எச்சரிக்கையும் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
நிதி ஆயோக் இப்படிக் கூறுவது புதிதல்ல. ஏற்கனவே அது "அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகை குறைந்துகொண்டே வருகிறது; அதனால் அவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியது.
அதன்பின் அண்மையில் "பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடிகளை ஒழித்துவிட வேண்டும்" என்றும் சொல்லியது நிதி ஆயோக்.
இப்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்கின்ற மக்களின் வாழ்வாதார அடிப்படைகளிலேயே கைவைக்கும் கபடத்தனம் ஏன்?
சமூக சமத்துவம் அதாவது சமூக நீதி என்பதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி ஏன்?
நாட்டில் 75 விழுக்காடு மக்களது மொத்த வருவாய் வெறும் 75 பேரிடமே குவிந்திருக்கும் ஒரு அநியாய, அக்கிரம பொருளியல் சூழலே இருந்துவருகிறது. அதற்குப் பங்கம் வராதபடி பாதுகாப்பதற்குத்தான் இப்படித் திட்டமிடுகிறார்கள் மோடியும் அவரது நிதி ஆயோக்கும்.
எல்லோரும் எல்லாமும் பெற்றுவிட்டால் உதவாக்கரைகளான ஒருசிலரே தொடர்ந்து சமூகத்தின் உச்சாணிக் கொம்பிலும் ஆட்சியதிகாரத்திலும் உட்கார்ந்திருக்க முடியாதே என்ற அருவருப்பான அச்சம்தான் அவர்களை இப்படித் திட்டமிடச் செய்கிறது.
இது மக்களாட்சி, கூட்டாட்சி, ஜனநாயகம், சமூக நீதி ஆகிய உயர் பண்புகளை உள்ளடக்கிய நம் அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும்.
எனவே "தனியார் துறையில் இடஒதுக்கீடு கூடாது" என்று சொல்லும் நிதி ஆயோக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனை எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் கூறியுள்ளார்.