வேந்தர் மூவிஸ் மதனும்... மனைவிகளின் குடுமி பிடி சண்டையும்...
பணத்திற்கு நாம் எஜமானாக இருக்கவேண்டும் என்பார்கள். பணம் அதிகமானாலே அதற்கு அடிமையாகிவிடுவோம். வேந்தர் மூவிஸ் மதனின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.
சென்னை : பணம் அதிகமிருந்த காரணத்தால் மூன்று மனைவிகளை திருமணம் செய்து ஊர் ஊராக சுற்றி உல்லாசம் அனுபவித்து இப்போது பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் கம்பி எண்ணுகிறார். இங்கே மதனின் மனைவிகளிடையே குடுமிப்பிடி சண்டை ஆரம்பித்து விட்டது.
மதனுக்கு ஆரம்ப காலத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பது முதல் நடிகைகள் வரை இருந்த தொடர்புகள் அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எஸ்ஆர்எம் கல்லூரியில் 225 மருத்துவ சீட்டில் மதனுக்கு மட்டும் ஆண்டுதோறும் 50 சீட் வழங்கப்படுமாம். மதனின் இந்த மோசடி மூலம் ரூ.25 கோடி வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர இவர் வாங்கி கொடுக்கும் 50 சீட்டுகளுக்கான கமிஷன் தொகையும் மதனுக்கு கிடைத்ததால் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்துள்ளார் மதன். வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார்.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுக்கு பணம் வாங்கினார். அதில் பாதி பணத்தை கல்லூரி நிர்வாகத்தில் உள்ள ஒருவரிடம் தனது கூட்டாளியான சுதீர் மூலம் கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை சுதீர் கொடுக்கும் போது அதை வீடியோ எடுத்துக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கும் ரவி பச்சமுத்து, திடீரென இந்த ஆண்டு சீட் வழங்க தடை விதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் இந்த விவகாரத்தில் பச்சமுத்து மாட்டினால் தான் தாம் தப்பிக்க முடியும் என நினைத்து தான் கடிதம் எழுதி வைத்து மதன் தலைமறைவானார்.

உல்லாச உலகம் எனக்கே சொந்தம்
மதனின் தலைமறைவு வாழ்க்கை நடத்திய 179 நாட்களும், ஒரு உல்லாச வாழ்க்கையே வாழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரித்துவார், கோவாவிலும் மாறு வேடங்களில் சுற்றித்திரிந்துள்ளார் மதன்.

வர்ஷா உடன் பழகியது எப்படி?
மதனின் 2வது மனைவி சுமலதாவின் மகன் பிறந்த நாள் விழாவுக்கு, உறவினர் என்ற முறையில் வர்ஷா என்பவர் வந்தார். அவரை மனைவி சுமலதாதான் மதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தலைமறைவாக வாழ்ந்த போது திருப்பூரில் வர்ஷாவின் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்தார் மதன்.

திருப்பூரில் கைது
தலைமறைவாக இருந்த மதன், திருப்பூரில் உள்ள வர்ஷா வீட்டில்தான் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக மதனின் முதல் மனைவி சிந்துஜா மற்றும் 2வது மனைவி சுமலதா ஆகியோரை வரவழைத்திருந்தனர்.

சண்டை போட்ட மனைவிகள்
காவல்நிலையத்தில் இரு மனைவிகளுக்கு இடையே போலீஸ் அலுவலகத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் தலையிட்டு இங்கு தகராறு செய்யக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கவே, தனித்தனியாக அமர்ந்து ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.

கையெழுத்து போட போட்டி
கைது செய்யப்பட்ட மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது குறித்து அவரது மனைவியிடம் கையெழுத்து வாங்க போலீசார் முயன்றனர். அப்போது இருவருமே முண்டியத்து கொண்டு தன்னிடம் தான் கையெழுத்து பெற வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் செய்வதறியாமல் சிறிது நேரம் திகைத்தனர். பின்னர் முதல் மனைவி சிந்துஜாவிடம் கையெழுத்து பெற்றுள்ளனர் போலீசார்

சொத்துக்களை முடக்க முடிவு
மதனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமறைவாக இருந்த 179 நாட்களும் அவர் எந்தெந்த மாநிலங்களில் தங்கியிருந்தார். அவர் வாங்கிய சொத்துக்கள் என்ன? போன்ற விவரங்களை பெற்று மனைவிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரது மனைவிகள், நெருங்கிய தோழிகளிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications