மெரினாவில் இனி 6 வரிசைகளில் மட்டுமே கடைகள்– மாநகராட்சி அறிவிப்புக்கு எதிர்ப்பு
சென்னை: சென்னை மெரினாவில் பெருகியுள்ள கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்திசிலை பின்பக்கம் மெரினா மணற்பரப்பை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக அதிகாரிகள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு திரண்டு வந்த கடை உமையாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடைகளை அகற்ற வரவில்லை, ஒழுங்குபடுத்த வந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்க கடை உரிமையாளர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மெரினா மணல்பரப்பு முழுவதும் 1,500 கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றினை இரண்டு இடங்களில் தலா 6 வரிசைகளில் மட்டுமே நடத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடைக்காரர்கள் எதிர்ப்பால் நடவடிக்கையை தொடர முடியாத நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு வந்த காவல்துறை அதிகாரிகளின் சமரசத்தையும் ஏற்க மறுத்துவிட்டனர். மாநகராட்சியின் அலட்சிய போக்கின் காரணமாகவே மெரினாவில் கடைகள் பெருகியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.