சென்னை வெள்ளச் சேதம்.. நேரில் ஆய்வு செய்தார் வெங்கையா நாயுடு... ஜெ.வுடனும் ஆலோசனை
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற அவர், அங்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையால், இந்தாண்டு தமிழகம் மிக அதிகளவில் மழையைப் பெற்றுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளது.

தமிழக வெள்ள சேதம் குறித்து பிரதமர் மோடி, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.அசோக் கஜபதி ராஜூ ஆகியோர் சமீபத்தில் சென்னை வந்து நேரில் ஆய்வு செய்தனர். அதோடு மழை வெள்ள சேதத்தை கடுமையான பாதிப்பு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெள்ள சேதாரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை வந்தார். காலை 8.45 மணி அளவில் வேளச்சேரி ராம்நகர் பகுதிக்கு வந்த வெங்கையா நாயுடு, வீதி வீதியாக நடந்து சென்று மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு வந்து அவரிடம் தங்களின் பாதிப்புகளைக் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும், சேதம் அடைந்த புத்தகங்களையும் ஆவணங்களையும் வெங்கையா நாயுடுவிடம் அவர்கள் எடுத்துக் காட்டினர். அதை வாங்கிப் பார்த்த வெங்கையா நாயுடு, "வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று பள்ளி சான்றிதழ் வழங்கவும் புதிய புத்தகம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் உறுதுணையாக இருக்கும். யாரும் கவலைப்பட தேவையில்லை. மாநில அரசுடன் பேசி உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்'' என அவர்களிடம் உறுதியளித்தார்.
பின்னர் அவர் முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம், சேப்பாக்கம் பகுதியில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டார். அவருடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மாவட்ட தலைவர்களை காளிதாஸ், ஜெய்சங்கர், பிரகாஷ் உள்பட நிர்வாகிகள் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற வெங்கையா நாயுடு, அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மழை வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications