உடல்நலக்குறைவு: குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலக்கியச் செல்வர் என்று போற்றப்படும் குமரி அனந்தன், கடந்த 2013ஆம் ஆண்டு பாரத மாதா கோயில் அமைக்க வலியுறுத்தி, பாப்பாரப்பட்டியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தருமபுரிக்கு சென்றபோது அவர் தங்கியிருந்த விடுதியில் தவறி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற போது திருச்சி அருகே அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
தற்போது முதுமை காரணமாக மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.