அண்ணா பல்கலை. துணை வேந்தர்.. அரசு பரிந்துரைத்த நபர்களை அதிரடியாக நிராகரித்த ஆளுநர்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மூன்று பேரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில ஆளுநர் என்பவர் அம்மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவியையும் வகிப்பார். அவர்தான் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் படைத்தவராகும்.
பொதுவாக மாநில அரசு பரிந்துரைக்கும் துணைவேந்தர்களைதான் ஆளுநர் நியமித்து வந்தார். கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் முதல்வர்களாக இருந்தபோது இப்படித்தான் ஆளுநர்கள் செயல்பட்டனர். ஆனால் இப்போது ஆளுநர், மாநில அரசின் பரிந்துரையை புறம்தள்ளியுள்ளார்.
அவசர சட்டம்
பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை நியமிப்பதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. அவற்றை களையும் வகையில் அவசர சட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது.
துணைவேந்தர் நியமனம்
உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 13 பல்கலைக்கழகங்களில், சென்னை பல்கலைக்கழகம் தவிர இந்த அவசர சட்டம் பொருந்தும். இந்த அவசர சட்டத்தின்படி தான் இனி துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்ற பிறகு, இந்த சட்டம் அங்கு செல்லுபடியாகும். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை அரசு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பியது.
புதிய தேர்வுக்குழு
இப்பட்டியலில் கவர்னருக்கு திருப்தி இல்லாததால் அதை நிராகரித்துவிட்டாராம். புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமிக்கப்படுவார்.
ஆளுநருக்கு அனுப்பிய பட்டியல்
ஆளுநருக்கு அரசு அனுப்பிய பட்டியலில், மோகன், சொர்ணமூர்த்தி, எபினேசர் ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இப்பட்டியலை கவர்னர் நிராகரித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.