ஊராட்சி துணைத்தலைவர் கொலை வழக்கு - ஐவர் சரண்
செங்கோட்டை: நெல்லை அருகே ஊராட்சி துணைத்தலைவர் கொலை வழக்கில் 5 பேர் செங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று சரண அடைந்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 38). இவர் மேலப்பாட்டம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வந்தார். திங்கட்கிழமையன்று மதியம் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடையில் புரோட்டா வாங்கிக் கொண்டு வீடு நோக்கி புறப்பட்டார்.
பாளையங்கோட்டை - சீவலப்பேரி ரோட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கி முன்பு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் திடீரென வந்து பாலமுருகனை வழிமறித்தது. அந்த கும்பலை பார்த்ததும் கூட்டுறவு வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அந்த கும்பல் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோட்டார் சைக்கிளில் இருந்த பாலமுருகனை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றார்கள்.
பட்டப்பகலில் படுகொலை
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வாகனங்களில் வந்தவர்களும் வேறுவழியாக சென்றார்கள். இக்கொலைத் தொடர்பாக நெல்லை மாநகர போலீசார் 18பேர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைதேடி வந்தனர்.
10 பேர் மீது வழக்கு பதிவு
இந்த கொலை தொடர்பாக மேலப்பாட்டத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி, கண்ணன், ஆசைத்தம்பி, பொன்முத்துராஜ், சுரேஷ், செந்தில், சிவா, பழனி, அருண், சுந்தர்சிங் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.
5 பேர் சரண்டர்
இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய மேலப்பாட்டத்தை பொன் முத்துராஜ், குட்டி சுரேஷ்,ஆசைத்தம்பி,பழனி செல்வம் ஆகிய ஐவரும் இன்று செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் நீதிபதி மாதவராமானுஜம் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications