கிருஷ்ணகிரியில் லாரி கவிழ்ந்து சிறுவர்கள் பலியான கோர சம்பவம் -வீடியோ
கிருஷ்ணகிரியில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடி வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த சிறுவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வீட்டின் சுவற்றில் பலமாக மோதியதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள நக்கல்பட்டியில் மோகன் என்பவருக்கு சொந்தமான கிரானைட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் லாரிகள் கிரானைட் கற்களை ஏற்றிச்செல்வது வழக்கம்.
கிரானைட் தொழிற்சாலையில் இருந்து லாரி ஒன்று இன்று காலை கிரானைட் கற்களை ஏற்றிச் சென்றது. அப்போது வேகமாக வந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சந்திரா என்பவரது வீட்டருகே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த ராஜா என்பவரின் மகன் ஹரிஷ் (12) மற்றும முருகேசன் என்பவரின் மகன் கவியரசு (6) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் சந்திராவின் கால் முறிந்தது. அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.