ப்ளூவேல்.. சொன்ன சொல்லை காப்பாற்றாமல் போய்விட்டானே.. விக்னேஷ் தாய் கதறல்
ப்ளூவேல் கேம் விளையாட மாட்டேன் என்றும், சாக மாட்டேன் என்றும் தன்னிடம் விக்னேஷ் உறுதியளித்ததாக அவரது தாய் டெய்ஸி ராணி தெரிவித்தார்.
மதுரை: ப்ளூவேல் கேம் விளையாடி சாகமாட்டேன் என்று தன்னிடம் விக்னேஷ் உறுதியளித்ததாக அவரது தாய் தெரிவித்தார்.
Recommended Video
மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த டெய்ஸி ராணி, ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ். இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். ப்ளூவேல் விளையாட்டை தன் செல்போனில் டவுன்லோடு செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார் விக்னேஷ்.
புதன்கிழமை பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் ப்ளூவேல் விளையாட்டை விளையாடியுள்ளார். முடிவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் முதல்முறை
இத்தனை நாட்களாக வடமாநிலங்களில் மட்டுமே இந்த துயரம் நடந்து வந்தது. இந்நிலையில் முதல்முறையாக தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ப்ளூவேல் கேம் விளையாடிய மாணவர் உயிரிழந்துள்ளது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடிக்காத என் மகன்
இதுகுறித்து விக்னேஷின் தாய் டெய்ஸி ராணி கூறுகையில், என் மகனுக்கு குடிப்பழக்கமே கிடையாது. ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடித்திருந்தான். அதேபோல் ரத்தத்தில் பெயரை எழுதியிருந்தான்.
குரூப்பாக விளையாடினர்
இந்த விளையாட்டை குரூப்பாக மாணவர்கள் விளையாடியதை நான் பார்த்துள்ளேன். அப்போது விக்னேஷிடம் அறிவுறுத்தினேன். அவனும் இனி நான் அந்த விளையாட்டை விளையாட மாட்டேன் என்றான். பத்திரிகை செய்திகளில் வெளியான தகவலை படித்து பயந்துபோய், நீயும் இதுபோல கேம் விளையாடி எதையாவது செய்ய கூடாது என்றேன். அவனும் சாக மாட்டேன் என்றும் உறுதியளித்தான்.
சிறிது காலம்
அவன் சொன்னபடி அந்த விளையாட்டை விளையாடுவதை நிறுத்திவிட்டான். எனினும் கொஞ்ச நாள்கள் கழித்து மீண்டும் விளையாட துவங்கினான். எனது மூத்த மகன் விளையாட வேண்டாம் என்று கூறியும் என்னதான் நடக்குதுனு பார்க்கலாம் என்று விளையாடி தற்போது எனக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல் போய்விட்டான் என்று டெய்ஸி ராணி கதறி அழுதார்.