ராஜபக்சே அரசை கண்டித்து விஜய் ரசிகர்கள் மதுரை, புதுக்கோட்டையில் போராட்டம்
மதுரை: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்து விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 30ம் தேதி தீர்ப்பளித்தது.
Today protest against #Sri_Lankan government in #Madurai pic.twitter.com/CnplSPBGr3
— Vijay (@Actor_Vijay) November 9, 2014
இதை கண்டித்து தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சனை பற்றி தமிழ் திரை உலகினர் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்தும், இலங்கை அரசை கண்டித்தும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அண்ணாத்துரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். மேலும் மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், ராஜபக்சே அரசை கண்டித்தும் புதுக்கோட்டையில் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை போராட்டம் பற்றி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.