வீரப்பன் காட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் விசிட் அடித்த விஜயகுமார்
சத்தியமங்கலம்: தமிழக அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார், நான்கு நாட்கள் முன்பு சத்தியமங்கலம் காட்டுக்கு விசிட் அடித்தார். அங்குள்ள மலைவாழ் மக்களின் கோவில்களுக்கு சென்று வழிபட்ட அவர், மக்களையும் சந்தித்து பேசியுள்ளார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வீரப்பன் சமாதியில் நினைவுச் சின்னம் கட்டப் போவதாக அந்த நேரத்தில் முத்து லட்சுமி அறிவித்தார். இந்த நிலையில் விஜயகுமாரின் வருகை பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்துள்ளது.
தமிழக, கர்நாடக போலீஸாருக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கிவந்த சந்தன கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமார், நாகப்பா மற்றும் வன அதிகாரிகளை கடத்தி இரு மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தார்.
வீரப்பன் சுட்டுக்கொலை
பல ஆண்டுகால தேடுதல் வேட்டைக்குப் பின்னர் சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தருமபுரியில் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வெற்றிக்கார பன்னாரி கோவிலில் மொட்டை போட்டு, தீ மிதித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார் அப்போதைய அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார்.
வீரப்பன் கூட்டாளிகள்
சந்தன கடத்தல் வீரப்பன் சகாப்தம் முடிந்துவிட்ட நிலையிலும், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிரடிப்படை வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை. மீண்டும் காட்டுக்குள் நக்ஸலைட்டுகள், வீரப்பனின் பழைய கூட்டாளிகள் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் அதிரடிப் படையினர் தீவிர கவனம் செலுத்தி, தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட்டி வீரப்பன்
இதுபோன்ற சூழ்நிலையில், யானை தந்தம் கடத்தல், சந்தனக் கட்டை கடத்தல் மற்றும் வன விலங்குகளை கொன்ற வழக்கில் குட்டி வீரப்பன் என்கிற சரவணன் என்பவரை மேட்டூர் வனத்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், கர்நாடக போலீஸார் குட்டி வீரப்பனை, அந்த மாநில வழக்குகளுக்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேடப்படும் குற்றவாளிகள்
சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் குட்டி வீரப்பன் ஆகியோருடனான வனக்குற்றங்களில் கத்திரிப் பட்டியை சேர்ந்த மோட்டா என்கிற சின்னப்பி (55), மாட்டாலியை சேர்ந்த ராவணன் (60), பாலாறு சின்னப்பி உள்ளிட்டவர்கள் கர்நாடக அரசால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பல்வேறு வனங்குற்றங்களில் ஈடுபட்டதாக கர்நாடக போலீஸாரால் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.
தலைமறைவு வாழ்க்கை
இதில் ராவணன், மோட்டா, பாலாறு சின்னப்பி ஆகியோர் தமிழக, கர்நாடக போலீஸார் பிடியில் சிக்காமல் மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
தேடுதல் வேட்டை
சந்தன கடத்தல் வீரப்பனின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்த மேற்கு தொடர்ச்சி மலையில், அவனது பழைய கூட்டாளிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்களைப் பிடிக்க தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் காட்டுக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ராவணன் மீது கர்நாடக போலீஸில் பல்வேறு வனக்குற்ற வழக்குகள் உள்ளன.
மீண்டும் முகாம்
அதேபோன்று, மோட்டா மீது தமிழகத்தில் ஒரு வழக்கும், கர்நாடக மாநிலத்திலும் வழக்குகள் உள்ளன. பாலாறு சின்னப்பி மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக ஏசிஎஃப் வாசுதேவ் மூர்த்தி தலைமையிலான அதிரடிப் படையினர் மாதேஸ்வரன் மலையில் முகாமிட்டு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடமாட்டம்
தமிழக அதிரடிப் படையினர் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பனின் பழைய குற்றவாளிகள் நடமாட்டம் உள்ளதா என 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பத்தாண்டுகளில்
சந்தன மரக்கடத்தல் வீரப்பனை தமிழக அதிரடிப்படை சுட்டுக் கொன்று பத்தாண்டுகள் முடியும் நிலையில், மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பனின் பழைய கூட்டாளிகள் நடமாட்டம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் டிஜிபி விஜயகுமார்
மேற்கு தொடர்ச்சி மலையில் நக்ஸல்கள், வீரப்பன் மற்றும் குட்டி வீரப்பனின் கூட்டாளிகள் நடமாட்டம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து, முன்னாள் டிஜிபியான விஜயகுமார் தமிழக, கேரள எல்லையில் உள்ள அதிரடிப்படை முகாமுக்கு சில தினங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். வீரப்பன் இறந்து பத்தாண்டு நிறைவு அடைவதையொட்டி, அதிரடிப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், அவர்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டி வருகை புரிந்ததாக தெரிவித்தார்.
பழங்குடியின மக்கள்
சத்தியமங்கலம் மலைக்காட்டில் அதிரடிப்படை முகாம்கள் இருந்த திம்பம், பழமலை, பால வாடி, சோர்மாளம் போன்ற பகுதி களுக்குச் சென்ற விஜயகுமார் கடைசியாக, கெத்தேசால் வந்தார். பழங்குடியின மக்களின் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இந்த கெத்தேசாலில்தான் 1992, 1993-ஆம் ஆண்டுகளில் தன் குழுவைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்று மலைமக்கள் ஏழுபேரை சந்தனவீரப்பன் கும்பல் சுட்டுக்கொன்றது.
விலை போகாதீர்கள்
கெத்தேசால் மக்களைச் சந்தித்த விஜயகுமார் "இன்னமும் வறுமையில் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கீங்களா? ஆனால் நிம்மதியா இருப்பீங்க இல்லையா? வீரப்பன் உங்களை மிரட்டி வச்சிருந்தான்.
நக்ஸல்பாரிகள் உங்களோட பசியை பயன்படுத்தி துப்பாக்கி கொடுத்து புரட்சி என்பார்கள். அப்படி யாரு வந்தாலும் இடம் கொடுத்துவிடாதீர்கள். கஷ்டப்பட்டாலும் கெளரவமான நாட்டுப்பற்றுடையவராக இருக்கணும்... என்று கூறினார் விஜயகுமார். பின்னர் பழைய நினைவுகளை அசைபோட்டவாரே அங்கிருந்து கிளம்பினார்.
அடிப்படை வசதியில்லை
ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, ஆசனூர், கடம்பூர், குன்றி, பர்கூர் ஆகிய பகுதிகளை ஒட்டிய மலை கிராமங்களில், கல்வி, மருத்துவம், குடிநீர், சாலைவசதி, மின்சாரம், குடியிருப்புகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இன்னும் முழுமையாக சென்றடையாமல் இருந்து வருகிறது. சந்தன வீரப்பனின் பிடியில் இந்த மலைக்கிராமங்கள் இருந்து வந்த நிலையில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை கொண்டு சேர்ப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக முன்பு அரசு நிர்வாகங்கள் கூறி வந்தன.
தவிக்கும் மக்கள்
வீரப்பன் மறைவிற்கு பிறகும், இந்த மலைக்கிராம மக்களை அரசு கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான உண்மை. மத்திய, மாநில அரசுகள் பழங்குடியின மக்களுக்காக பெரும் தொகையை நிதியாக ஒதுக்கி பல திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால், இவை அந்த மக்களை சென்றடையாத நிலை உள்ளது.
மீண்டும் வந்த விஜயகுமார்
ஆனால் மீண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் பதுங்கி, வன உயிரினங்களை வேட்டையாடுவதாகவும், பழைய குற்றவாளிகள் காட்டுக்குள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கர்நாடக அதிரடிப்படை கூறிவருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், முன்னாள் டிஜிபி விஜயகுமார் கூடலூர், உதகை பகுதிகளுக்கு வந்து அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களை சந்தித்து சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உதவி செய்ய முடியாதா?
விஜயகுமார் இப்போது நக்ஸல் ஒழிப்புப் பிரிவிலும், மத்திய உள்துறையின் மூத்த பாதுகாப்பு அதிகாரியாகவும் இருக்கிறார். அவரது திடீர் வருகை பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயகுமார் வந்து பேசிவிட்டு சென்ற பிறகு, இன்னமும் மின்சாரம், சாலை வசதி என எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு யாராவது உதவ மாட்டார்களா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.