மோடியின் நடவடிக்கையை 'கொஞ்சமாவது விமர்சித்த' முதல் நடிகர் விஜய்!
ரூ 500, 1000 ரூபாய்த் தாள்களை ஒழிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கணத்திலிருந்து அந்த நடவடிக்கையை பெரிதாக வரவேற்றவர்கள் இந்திய சினிமா நட்சத்திரங்களும், பெரும் தொழிலதிபர்களும்தான்.
இவர்களிடம் சின்ன விமர்சனம் கூட இல்லை. ஹேட்ஸ் ஆஃப் என்று மோடிக்கு முதல் வாழ்த்துச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கமல் ஹாஸன், ஆமீர்கான், ஷாரூக்கான் என பலரும் பாராட்டினர். அம்பானி தொடங்கி பெரும்பாலான தொழிலதிபர்களும் இந்த ரூபாய் ஒழிப்பை பாராட்டித் தள்ளினார்கள்.
ஆனால் கடந்த ஒரு வார காலமாக இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பொதுமக்கள்தான். அதாவது ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சேமிப்பையே பிரதானமாக நம்பியிருந்த மக்கள் முட்டாள்களாக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணை / பையனை அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்க்க, திருமணம் செய்து வைக்க பத்துலட்சம், இருபது லட்சம் என சேமித்து வைத்தவர்கள், இன்று அந்தப் பணம் செல்லாது என்பதை உணர்ந்து விக்கித்துப் போயிருக்கிறார்கள்.
இதுகுறித்து சமூக வலைத் தளங்களில் பலரும் காரசாரமான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். மீடியா குறிப்பாக தொலைக்காட்சிகள் மக்கள் படும் பாடுகளை லைவாகக் காட்டி வருகின்றனர்.
'பழைய' ரூபாயை மாற்ற அதிகாலை 3 மணிக்கெல்லாம் வங்கி வாசலில் இடம்பிடித்துக் காத்திருக்கும் பொதுமக்கள், ஏடிஎம்மே கதி என்று கிடக்கும் நடுத்தரவாசிகள், சேமிப்பு என நம்பி லட்சங்களில் சேர்த்து வைத்த நல்ல பணமும் கள்ளப் பணமாகிப் போன சோகம், கோபத்தில் எப்படி அதை மாற்றுவது என்று தெரியாமல் கமிஷன் வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் மனிதர்கள் பற்றியெல்லாம் நிறைய செய்திகள்.
ஆனால் இதுபற்றியெல்லாம் பிரபலங்கள் யாரும் பேசவே இல்லை. பேசினால் தங்களையும் கருப்புப் பண புள்ளிகள் பட்டியலில் சேர்த்து விடுவார்களோ என்ற தயக்கம் பலருக்கும்.
இப்படி ஒரு சூழலில் இன்று திடீரென்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய், மோடியின் நடவடிக்கையை 'மென்மையாக' விமர்சித்துள்ளார்.
"ரூ 500, 1000 நோட்டு ஒழிப்பு நடவடிக்கை நல்லதாகவே இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு முன், மக்களுக்கு சற்றும் சிரமம் இல்லாத வகையில் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்," என்று கூறிய விஜய், மோடியின் நடவடிக்கையால் பொதுமக்கள் என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று பட்டியலிட்டார்.
சமீப காலமாக எந்த விஷத்துக்காகவும் கருத்துத் தெரிவிக்காத, வாயைத் திறக்கவே தயங்கும் விஜய் இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு விஷயத்தில், பேசியிருப்பது கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, அரசியல் உலகையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அதே நேரம் பிரபல நடிகர்களில் இந்த அளவுக்காவது விமர்சனத்தை முன்வைத்துள்ளவர் விஜய் மட்டுமே என்ற பேச்சுக்களையும் கேட்க முடிகிறது.