விஜயபாஸ்கர் கல்குவாரியில் ஐடி ரெய்டு - கத்தை கத்தையாக ஆவணங்கள் சிக்கின
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் கத்தை கத்தையாக ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரிகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சிபிஆர்எப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த ரெய்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பனராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.

பணம் பட்டுவாடா
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மட்டும் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்த ஆர்.கே. நகரில் விஜயபாஸ்கர் தலைமையிலான டீம் களமிறங்கியது. வாக்காளர்களுக்கு அவரே நேரடியாக பணம் பட்டுவாடா செய்வதாகவும் புகார்கள் சென்றன.

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பதுக்கியுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து தமிழகத்தின் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

கல்குவாரியில் ரெய்டு
புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதே போல இலுப்பூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இங்கிருந்துதான் ஆர்.கே. நகருக்கு பணம் சப்ளை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுகிறது.

துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
தொடர்ந்து மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் என 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிபிஆர்எப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த ரெய்டு நடைபெறுகிறது.

கத்தை கத்தையாக ஆவணங்கள்
காலை முதல் நடைபெற்ற சோதனையில் ஆர்.கே நகர் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற வரவு செலவு கணக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தை கத்தையாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications