முதல் முறையாக வைகோவுக்கு பிரசாரம் செய்யப் போகும் விஜயகாந்த்!
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 2ம் தேதி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தேமுதிக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ந்தேதி முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து 2 ம் கட்டமாக தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளிலும் விஜயகாந்த் ஏப்ரல் 2ம் தேதி முதல் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக நாளை விஜயகாந்த் நெல்லை வருகிறார். நெல்லை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் ஏப்ரல் 2ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்கிறார்.பின்னர் 6 மணிக்கு நாங்குநேரியிலும், 8 மணிக்கு பாளை மார்க்கெட் திடலிலும் தேமுதிக வேட்பாளர் சிவனணைந்தபெருமாளுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து தென்காசி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சதன்திருமலை குமாரை ஆதரித்து சங்கரன் கோவிலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
அதனை தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 இடங்களில் ஒரே வேனில் இருந்தபடி வைகோவை ஆதரித்து விஜயகாந்த் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications