ராகுல் மூலம் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்தாலே போதும்... திமுகவிற்கு விஜயகாந்த் ஆலோசனை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூலம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு அழுத்தம் கொடுத்தாலே போதும் என்று திமுகவிற்கு விஜயகாந்த் ஆலோசனை கூறியுள்ளார்.
Recommended Video
திருவாரூர் : திமுக போராடாமல் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தமிழகமே போராட்டக்களமாகியுள்ளது. கல்லூரி மாணவர்கள், விவசாய சங்கத்தினர், வழக்கறிஞர்கள் என்று பலரும் உணர்வு ரீதியாக காவிரி உரிமைக்கான போராட்டத்தில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சியினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் கடந்த ஒரு வாரமாக பல விதமான போராட்டங்கள் முன்எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை மறியல், ரயில் மறியல், முழுஅடைப்பு போராட்டம் என்று போராட்ட வடிவங்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூரில் தேமுதிக சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் பங்கேற்றார்.
அவசியம் காவிரி வாரியம்
ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த் பேசியதாவது : விவசாயிகள் பிரச்னைகள் தீர வேண்டும் எனில் காவிரி மேலாண்மை வாரியத்தை அவசியம் அமைத்தே ஆக வேண்டும். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.
ஏமாற்றும் கட்சிகள்
காவிரி பிரச்னையில் எல்லா கட்சிகளும் ஏமாற்றுகின்றன என்பதை மக்கள் உணர வேண்டும். காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துகிறது. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிதானே கர்நாடகத்தில் நடக்கிறது.
ராகுலிடம் அழுத்தம் கொடுக்கச் சொல்லுங்கள்
திமுக போராடாமல் ராகுலை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும். எனவே, அனைவருமே நாடகம் ஆடுகின்றனர் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவால் செய்திருக்க முடியும்
திமுக நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்த போதே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். காவிரி பிரச்னையில் பிற கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.