மீண்டும் வேலையை காட்டிய விஜயகாந்த்... பெரம்பலூரில் தொண்டருக்கு 'பளார்'
காது அருகே வந்து கோஷம் போட்ட தொண்டர் கன்னத்தில் விஜயகாந்த் பளார் என அறைவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்: தொண்டர்களை அடிப்பது, பத்திரிகையாளர்களை விமர்சிப்பது என்பது தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கம். சிறிது காலம் அமைதியாக இருந்த விஜயகாந்த், பெரம்பலூரில் நேற்று தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து தமது திருவிளையாடலை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.
பொதுக் கூட்டங்களில் பேசும்போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் நிதானமற்றவராகவே நடந்து கொள்வார் விஜயகாந்த். பொதுவாக ஒருமையில் பேசுவதும் பத்திரிகையாளர்கள் மீது காறி துப்புவதும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

கட்சி தொண்டர்களுக்கு எந்த நேரத்தில் விஜயகாந்திடம் இருந்து தாக்குதல் வரும் என தெரியாத பதற்றம் இருக்கும். பொது இடம் என்று கூட பார்க்காமல் கட்சி நிர்வாகிகளை அடிப்பதையும் வழக்கமாக கொண்டவர் விஜயகாந்த்.
பெரம்பலூரில் 'உங்களுடன் நான்' என்கிற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேற்று விஜயகாந்த் சென்றிருந்தார். அப்போது தொண்டர் ஒருவர் விஜயகாந்த் காது அருகே, கேப்டன் வாழ்க என கோஷம் போட்டார்.
இதில் கடுப்பான விஜயகாந்த், அந்த தொண்டர் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications