ஜெ. பட சேத வழக்கு... தஞ்சாவூர் கோர்ட்டில் விஜயகாந்த்... தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
தஞ்சாவூர்: முதல்வர் ஜெயலலிதா படத்தை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தஞ்சாவூரில் தலைமை தபால் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிக தொண்டர்கள் சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ ஊடகங்களிலும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தஞ்சை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி கொடுத்த புகாரின்பேரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், பரமசிவம் உள்ளிட்ட 59 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நகர செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன்ஜாமின் பெற்றார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு தஞ்சை குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜர் ஆவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருவதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் அதிகளவில் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
பின்னர் இரண்டு நபர் பிணைகளுடன் விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்தார். நீதிபதி மூர்த்தி முன்னிலையில் சரணடைந்து தனக்கு வழங்கப்பட்ட ஜாமினை அவர் உறுதிபடுத்திக் கொண்டார்.
நீதிமன்றத்தில் விஜயகாந்த்தைப் பார்த்த தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அவரது அருகில் செல்ல முயன்றனர். இதனால், விஜயகாந்த் நீதிமன்றத்திற்குள் வரும்போதும் போகும்போதும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.