சட்டசபை "லாபி" வரை வந்தார் விஜயகாந்த்.. கையெழுத்துப் போட்டுவிட்டு சென்றார்
சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார். ஆனால் சட்டசபைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மாறாக கையெழுத்து மட்டும் போட்டு விட்டுக் கிளம்பிச் சென்றார்.
தமிழக சட்டசபையி்ல் பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். அவர் சட்டசபைக்கு சென்று நெடு நாட்களாகிறது.
கடந்த கூட்டத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அனைவரையும் சட்டசபை சபாநாயகர் தனபால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனால் அவர்களால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் விஜயகாந்த் கடந்த கூட்டத்தின்போது சபையில் இல்லாததால் அவர் மட்டும் சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பினார்.
இருப்பினும் அவர் சட்டசபைக்கு வராமல் உள்ளார். சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் உறுதிபட விஜயகாந்த் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் இன்று அவர் திடீரென சட்டசபைக்கு வந்தார். ஆனால் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. லாபி வரை வந்த விஜயகாந்த் அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.