மக்களுக்காக கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா தருவாரா ? விஜயகாந்த் கேள்வி
குன்னூர்: மக்களுக்காகவே நான் என கூறும் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு தர தயாரா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றனர்.

அதன்படி, மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையடுத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குன்னூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜயகாந்த், தமிழக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக, அதிமுக கட்சிகள் குறியாய் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். திமுக தலைவர் கருணாநிதி, தம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தனது திருமண மண்டபத்தை இடித்ததாகவும், தற்போது தனது கட்சியை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மக்களுக்காகவே நான் என கூறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு தர தயாரா? என கேள்வி எழுப்பினார். விரோதியை கூட மன்னித்துவிடலாம், ஆனால்,துரோகிக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது என்றும் விஜயகாந்த் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications