காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவிற்கும் தனி டீலிங் இருக்கு: விஜயகாந்த் புகார்
சிவகங்கை: நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் நின்றால் தோற்றுவிடுவோம் என்று அவரது மகனை சிதம்பரம் நிறுத்தியுள்ளார் என்று விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனி டீலிங் இருக்கிறது என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த பிரசாரம் செய்தபோது, ''எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி. உங்கள் வாக்கு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதற்கு தான்.
சிவகங்கை தொகுதியை சேர்ந்த சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருக்கிறார். அவரை அ.தி.மு.க. குறை கூறுவதும் சிதம்பரம் அ.தி.மு.க.வை குறை கூறுவதுமாக இருக்கின்றனர்.
சிவகங்கையில் கடந்த முறை மோசடியாக வெற்றி பெற்றவர் தான் சிதம்பரம். ஆனால், சிதம்பரம் வெற்றி பெற ஜெயலலிதா தான் உதவி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.க வும் 'டீலிங்' இருக்கிறது. இந்த தொகுதியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். கிராமங்கள் இன்னும் விரிவாகக்கபட வில்லை. காடு கரை எல்லாம் கருவேலம் முளைத்து வீணாகியுள்ளது.
மத்திய அமைச்சர் சிதம்பரம், வாரம்தோறும் சனிக்கிழமை இங்கு வந்துவிட்டு வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம். மையத்தை மட்டும் திறந்து வைத்துவிட்டு போகிறார். அதனால், மக்களுக்கு என்ன பயன். இந்த தொகுதியில் இத்தணை ஆண்டு காலம் அவர் அமைச்சராக இருந்தும் இங்கு ஒரு மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வரவில்லை.
மீண்டும் நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் சிதம்பரம் தனது மகனை இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார். அவரும் வெற்றி பெற போவது இல்லை. இந்த நாட்டில் இருந்து ஊழல் ஒழிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு நீங்கள் வாக்களித்தது போதும் இந்த முறை மாற்றி காட்டுங்கள்" என்றும் விஜயகாந்த் கூறினார்.