அதை விட்டுருங்க.. அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் "அட்வைஸ்"!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அதை விட்டு விடுங்கள். நமது இலக்கு சட்டசபைத் தேர்தல்தான். அதை மனதில் வைத்து தொடர்ந்து பணியாற்றுங்கள். கூட்டணி குறித்துக் கவலைப்படாதீர்கள். அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் கூறியுள்ளாராம்.
உங்களுடன் நான் என்ற தலைப்பிட்டு ஊர் ஊராகப் போய் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பல ஊர்களுக்கும் அவர் போய் வருகிறார்.
சென்னையில் நேற்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தோல்வி உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
மோசமான தோல்வி
தேமுதிகவின் குழப்பமான, பேரம் தலை தூக்கிய அரசியலின் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை அது சந்தித்தது.
ஓட்டை விழுந்த வாக்கு வங்கி
போட்டியிட்ட 14 தொகுதிகளில் 10 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்தது தேமுதிக. மேலும் 10 சதவீதம் வரை இருந்த வாக்கு வங்கி அடிபட்டு 5 சதவீதமாக குறைந்து போனது.
சீரமைக்க ஆலோசனை
இதையடுத்து கடந்த மாதம் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி கட்சி சீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த்.
தற்போது உங்களுடன் நான்
தற்போது உங்களுடன் நான் என்ற டைட்டிலில் ஊர் ஊராகப் போய் கட்சியினரைச் சந்தித்து வருகிறார் விஜயகாந்த்.
முதல் கட்டமாக
ஜூன் 26-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை முதல் கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து கருத்துக்களை கேட்டார்.
2வது கட்டம் தொடங்கியது
2வது கட்டமாக, உங்களுடன் நான் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.
ரொம்பத் தாமதம்
9 மணிக்கெல்லாம் ஆரம்பிக்க வேண்டிய கூட்டம் விஜயகாந்த் ரொம்ப தாமதமாக வந்ததால் பிற்பகல் 12 மணிக்குத்தான் தொடங்கியது. 3 மணிக்கெல்லாம் கூட்டம் முடிந்தது.
விட்டு விடுங்கள்
இந்தக் கூட்டத்தின்போது, நாடாளுமன் தேர்தலை விட்டு விடுங்கள். 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும். கட்சிக்கு புதிய உறுப்பினர்களை விரைவாக சேர்க்க வேண்டும். தே.மு.தி.க.வின் எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் புரிதலை உருவாக்க வேண்டும். பாரதீய ஜனதா கட்சியுடன் நமக்கு தொடர்ந்து நல்லுறவு இருக்கிறது.
கூட்டணியை அப்புறம் பார்த்துக்கலாம்
அதேநேரத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவில் நம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், இப்போதே ஒன்றியம், கிளை, தெரு வாரியாக களப்பணியாற்ற தொடங்கி விடுங்கள். கூட்டணி குறித்து அந்த நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். 2016 நம்முடைய இலக்கு. நம்முடைய எண்ணம் இப்போது கட்சியை பலப்படுத்தும் பணியிலேயே இருக்க வேண்டும் என்று பேசினாராம் விஜயகாந்த்.
இன்றும்
நேற்று தென் சென்னை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜயகாந்த் இன்று மத்திய சென்னை, வட சென்னை நிர்வாகிகளுடன் ஆலோசனை கலக்கவுள்ளார்.