மோடி பிரதமரானால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் நிச்சயம்- விஜயகாந்த்
நாமக்கல்: முட்டைக்கு பெயர் போன நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் தமிழகத்திற்கு தேவையான "தண்ணீரை" கண்டிப்பாக பெற்றுத் தருவேன் என்று கூறியுள்ளார்.
கூட்டணியில் உள்ள பாஜகவின் நரேந்திரமோடி மட்டும் பிரதமரானால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை நிச்சயம் பெற்றுத்தருவேன் என்று பரமத்திவேலூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநயாக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ்.கே.வேலுவை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை பரமத்தி வேலூரில் பிரசாரம் செய்தார்.

நீங்கள்லா நல்லா இருக்கனும்:
அப்போது பேசிய அவர், "தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். இந்திய அளவில் ஊழலை ஒழிக்க மோடியை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும். அதற்காகத்தான் வாக்குகளை சேகரித்து வருகிறேன்.

முட்டை ஏற்றுமதி பாதிப்பு:
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பறவை காய்ச்சல் ஏற்பட்டால் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கிறது. அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்கப்படவில்லை.

அவசர சிகிச்சைக்கு வசதியில்லை:
காந்திச்செல்வன் எம்.பி. மருத்துவ கல்லூரி அமைப்பேன் என்று கூறினார். ஆனால் அதை செய்யவில்லை. காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக கூறினார்கள். ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல வருசமா இதுதான் சொல்றார்:
நேற்று கோவையில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, இதுதான் என் கடைசி தேர்தல் என சொன்னார். அவர் இதை கடந்த 1988 இல் இருந்தே சொல்லி வருகிறார். தமிழக மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒன்னும் கிழிக்கலை:
இரு திராவிட கட்சிகளும் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதை மறந்துவிடக்கூடாது.

தொகுதிப்பக்கம் போக முடியாது:
இரு கட்சியினரும் நாட்டை சுடுகாடாக்கிவிட்டார்கள். ஒருவர் 5 முறையும், மற்றொருவர் 3 முறையும் தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்து உள்ளோம் எனக்கூறி வருகிறார்கள். இதுதான் சாதனையா? அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து, கூட்டு சதியில் ஈடுபட்டு வருகின்றனர். எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் ஊருக் குள் போகமுடியாத சூழ்நிலை உள்ளது.

இதை இவர் சொல்றாருப்பா:
ஒரு ஊரில் எங்களுக்கு குவார்ட்டர், பிரியாணி வேண்டாம். தயவு செய்து குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்றும், கடலூர் தொகுதியில் காசு கொடுக்க வராதீங்க, ஓட்டு விற்பனைக்கு அல்ல என்றும் எழுதி வைத்து உள்ளனர்.

மோடியின் நல்லெண்ணம்:
நரேந்திர மோடி நாம் அனைவரும் இந்தியர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். சாதி மதத்தை பார்க்கக்கூடாது என்கிறார். என்னை பொறுத்த வரையில் ஏழை, பணக்காரன் என்ற இரண்டே சாதிதான் உள்ளது. கட்டாந்தரையான குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பைப்-லைன் அமைத்து ஒரு ஆளுக்கு 70 லிட்டர் வீதம் நான் ஒன்றுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார் நரேந்திர மோடி.

”குடி” தண்ணீர் நிச்சயம்:
அவர் பிரதமரானால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை நிச்சயம் பெற்றுத்தருவேன். எனவே தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications