மனுசன்னா கோபம் வரணும்...: விஜயகாந்த் (அடி வாங்குனவருக்கும் கோபம் வந்தா?)
திருவாரூர்: மனிதர்கள் எல்லாருக்குமே கோபம் வருவது இயற்கைதான். அதுபோலத்தான் எனக்கும் வருகிறது. கோபம் இருக்கிற இடத்தில்தானே குணமிருக்கும் என்று தன்மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நாகை லோக்சபா தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு திருவாரூர் கீழவீதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மன்னிப்பு கேட்கிறேன் மக்களே...
கடந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது தவிர்க்க இயலாத காரணத்தினால் திருவாரூர் வர இயலவில்லை. அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மக்களே.

மாமன் மச்சான்
எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதற்காக கூட்டணி வைத்துள்ளோம். ஒற்றுமையா... மாமன் மச்சான் மாதிரி பழகுறோம்.
எதுவுமே சரியில்லை
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, முப்போகம் விளைந்த பகுதி. தற்போது ஒரு போகம் சாகுபடி நடைபெறுகிறது. 8 மணி நேரம் மின்தடை, அறுவடைக்கு எந்திரங்கள் இல்லை. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூரை தனி தாலுகாவாக மாற்றுவேன் என கடந்த முறை தி.மு.க. கூறியது ஆனால் செய்யவில்லை.
இடுப்பு கழண்டு போச்சு...
விமானத்தில போறவங்களுக்கு ரோடு பத்தி என்ன தெரியும். இங்கே ரோடு எதுவுமே சரியில்ல. பிரசாரத்து வந்து எனக்கு இடுப்பு கழண்டு போச்சு... ஒரே குலுக்கல்தான்.
கடிதம் எழுதிட்டா போச்சா?
நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அரசு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறது. கடிதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா?
மோடி தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றி தருவோம்.
சொத்துக்கணக்கு சொல்றாங்க...
இன்று தி.மு.க. சொத்து விவரங்களை அ.தி.மு.கவும், அ.தி.மு.க.வின் சொத்து விவரங்களை தி.மு.க.வும் மாறி, மாறி வெளிப்படுத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம். நிச்சயம் தேவைகளை நிறைவேற்றி தருவோம்.
பாடம் புகட்டணும் மக்களே
மீத்தேன் திட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகிறது.
தி.மு.க. 5 முறை ஆட்சி செய்தது. அ.தி.மு.க. 3 முறை ஆட்சி செய்து வருகிறது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 40 ஆண்டுகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். டெபாசிட் வாங்க முடியாத நிலை ஏற்படுத்திட வேண்டும்.
மாம்பழத்திற்கு ஓட்டு
எனவே மோடி தலைமையிலான ஆட்சி அமைந்திட 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே நாகை லோக்சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்றார் விஜயகாந்த்.
கோபம் வர்றது இயற்கைதானே...
பிரசாரத்தின் போது தனக்கு கோபம் வருவதற்கான காரணத்தை தெரிவித்தார். தப்பு நடந்தா அங்கே தட்டி கேட்கணும். மனுசன்னா கோபம் வர்றது இயற்கைதானே... கோபம் இருக்கிற இடத்திலதானே குணமிருக்கும் என்று கூறினார் விஜயகாந்த்.
மிஸ்டர் கேப்டன், உங்ககிட்ட அடி வாங்குனவருக்கும் பதிலுக்கு கோபம் வந்தா என்ன ஆகும்?












Click it and Unblock the Notifications