வேனில் ஏசி ரிப்பேராம்: இதனால் பிரசாரத்தை கேன்சல் செய்த விஜயகாந்த்!
சென்னை: பிரசார வேன் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க., ஐ.ஜ.க. போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை ஆதரித்து விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வேனில் இருந்த ஏ.சி. பழுதடைந்தது. இதனால், விஜயகாந்த்துக்கும், வேனில் இருந்தவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும், பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு விஜயகாந்த் வந்தார். பின்னர், அவரது பிரசார வேன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஏ.சி. மெஷின் பழுதை சரி செய்யும் பணி நடைபெற்றது. ஆனால், முடியவில்லை.
இதையடுத்து, வேனை சென்னைக்கு கொண்டு சென்று ஏ.சி.யை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது.
பிரசார வேன் இல்லாததால், மதுரை தொகுதியில் 3ம் தேதி விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை திண்டுக்கல் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என கூறப்பட்டது. ஆனால், பிரசார வேனில் உள்ள பழுது அதற்குள் சரி செய்யப்பட்டு, மீண்டும் மதுரைக்கு கொண்டுவர கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விஜயகாந்தின் இன்றைய பிரசாரமும் ரத்தாகும் என தெரிகிறது.
இவருக்கு ஏசி ரிப்பேர் ஆனால் பிரச்சாரத்துக்கே வர முடியவில்லை. அப்போ கடும் வெயிலில் இவரைப் பார்க்கவும் கேட்கவும் நிற்கும் மக்கள் என்ன முட்டாளா?