பட்டுவேட்டி, சட்டையில் அமர்க்களமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 63-வது பிறந்தநாளை இன்று சென்னையில் கொண்டாடினார். இன்று காலையில் பட்டு வேட்டி-சட்டை உடுத்தி வீட்டில் உள்ள தனது பெற்றோர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரது மனைவி பிரேமலதா மகன்கள் சண்முகபாண்டி, பிரபாகரன், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொண்டர்களுக்கு இனிப்பு
வீட்டில் இருந்து வெளியே வந்த விஜய்காந்த் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்டனர். அவர் கை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
விஜயகாந்த் கண்டிப்பு
தொண்டர்கள் சில உணர்ச்சிவசப்ப காலில் விழ முயற்சித்தனர். அவர்களை விஜயகாந்த் தடுத்து கண்டித்தார்.
சால்வைகள், மாலைகள்
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், நல்லதம்பி, சுபா, மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், செந்தாமரைக் கண்னன், டிரிபிள் எஸ். சந்திரன் மற்றும் அம்பத்தூர் எஸ்.ஆஸ்டின் உள்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று சால்வை, மாலை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பதி பிரசாதம்
தென்சென்னை மாவட்ட அவைத் தலைவர் மலர்மன்னன், திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு செய்து, விஜயகாந்த்துக்கு பிரசாதம் வழங்கினார். வீட்டில் கட்சி நிர்வாகிகள் யுவராஜ், காமராஜ் உள்பட ஏராளமானோர் காத்து நின்று விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கமிட்டனர்.
மோடி வாழ்த்து
விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக தலைவர்கள் வாழ்த்து
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், குமாரவேலு, பேராயர் எஸ்றா சற்குணம், டைரக்டர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, நடிகர் ராஜேந்திரநாத் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
வைகோ வாழ்த்து
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நடிகர் சத்யராஜ், ராதாரவி, எச்.வசந்தகுமார் உள்பட பலர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
தேமுதிகவினர் கொண்டாட்டம்
தே.மு.தி.க.வினர் இன்று தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள்
ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.