ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது....: பட்ஜெட் பற்றி விஜயகாந்த் சொன்ன கமெண்ட்
சென்னை: தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். கவர்ச்சி திட்டத்துக்கும், இலவச திட்டங்களுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக நிதிநிலை திருத்த பட்ஜெட்டில், பல திட்டங்களை அறிவித்திருப்பது ஒருபுறம் வரவேற்பதாக இருப்பினும், ஒருபுறம் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே கருத்தபடுகிறது. தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. கவர்ச்சி திட்டங்களுக்கும், இலவச திட்டங்களுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் 110 விதியின் கீழ் சென்றமுறை அறிவித்த திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. அதேபோல் இந்த முறையும் அறிவிப்பு அரசாக மட்டும் இல்லாமல், செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும்.
"ஏட்டுச்சுரக்காய் கூட்டுக்கு உதவாது" அதுபோல் இந்த திட்டங்கள் ஏட்டளவில் மட்டும் இல்லாமல், செயல் அளவில் இருக்க வேண்டும். வரி இல்லாத பட்ஜெட் என்று பெருமை பேசினாலும், பற்றாக்குறை என்ற வலியுள்ள பட்ஜெட்டாகவே கருதப்படுகிறது என்று தனது அறிக்கையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.