நெஞ்சம் பதைபதைக்கிறது.. மாணவர் மீது தாக்குதல் நடத்தாமல் டாஸ்மாக் கடைகளை மூடுக: விஜயகாந்த்
நெஞ்சம் பதைபதைக்கிறது.. மாணவர் மீது தாக்குதல் நடத்தாமல் டாஸ்மாக் கடைகளை மூடுக: விஜயகாந்த்
சென்னை: மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் மறைவிற்கு பிறகு, அனைத்துதரப்பு மக்களும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கொந்தளிப்போடு உள்ளனர். அந்த வகையில் மாணவர் சமுதாயமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை, தடியடி என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாக தாக்குவதும், அவர்களை தரதரவென இழுத்து செல்லுவதும் போன்ற காட்சியை ஊடகங்களில் பார்க்கும்போது நெஞ்சம் பதபதைக்கிறது. இதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் கைது செய்யப்பபட்டுள்ள மாணவ, மாணவிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சம்பவம் ஜனநாயகமே இல்லாத சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாட்டில் நடைபெறுகிறதோ? என்கின்ற எண்ணம் தோன்றுகிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மாணவர் போராட்டங்களால்தான் திராவிட இயக்கத்தின் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவுபடுத்துகிறேன்.
அதிமுக அரசு காவல்துறையைக்கொண்டு, வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, மாணவர் சமுதாயத்தை அடக்கநினைக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உடனடியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications