சேலம் மறுவாக்குப் பதிவுக்கு விஜயகாந்த் கடும் எதிர்ப்பு
சென்னை: சேலம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் எடப்பாடி 254 ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது எனக்கு வியப்பைத் தருகிறது.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அந்த வாக்குச்சாவடியில் முதலில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறி, வேறு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இயந்திரம் கோளாறு என்ற காரணத்தைக் கூறி தற்போது மறுவாக்குப்பதிவு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தேர்தல் முடிந்து 20 நாட்களுக்குப் பிறகு அந்த இயந்திரத்தில் கோளாறு என்று யார் புகார் அளித்தார்கள். இந்த மறுவாக்குப்பதிவு தேவையற்றது. இதுகுறித்த நியாயமான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.