காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு ஆஞ்சாதவர் வைகோவின் தாயார்- விஜயகாந்த் இரங்கல்
சென்னை: தனது தள்ளாத வயதிலும் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்ற இலட்சியத்திற்காக நாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து போராடியவர். காவல்துறையின் அடக்குமுறையை கண்டு சிறிதும் அஞ்சாதவர் வைகோவின் தாயார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவரது இல்லத்தில், அவரை நேரில் சந்தித்தபோது என்மீது காட்டிய பாசமும், பரிவும், விருந்தோம்பலும் என்னை நெகிழ வைத்தது. அவர் தனது தள்ளாத வயதிலும் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்ற இலட்சியத்திற்காக நாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து போராடியவர். காவல்துறையின் அடக்குமுறையை கண்டு சிறிதும் அஞ்சாதவர்.
அரசியல் போராட்ட களத்தில் பெண்களும் இறங்கி போராடவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த வீரத்தாய்க்கு எனது வீரவணக்கம்.
அந்த வீரத்தாயை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மதிமுகவை சேர்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.