'மக்களின் முதல்வர்' வழிகாட்டுதலால்தான் ஜல்லிக்கட்டு தடுக்கப்பட்டதா? விஜயகாந்த் கேள்வி
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்துவார்கள் என்று இந்த அரசுக்கு தெரியாதா? எதிர் கட்சிகளும், பொதுமக்களும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட பின்பு கண் துடைப்புக்காக மத்திய அரசை நாடியுள்ளனர்.
ஒரு மாத காலம் முன்பே மத்திய அரசை நாடி, தடை உத்தரவை ரத்து செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அதே போல் ஏழை எளிய மக்களுக்காக வழங்கி வந்த பொங்கல் பொருட்களை, இந்த வருடம் வழங்காமல் அ.தி.மு.க அரசு ஏமாற்றி விட்டது.அதற்கான காரணத்தையும் இந்த அரசு தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே தமிழக அரசு கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது என்றும், இந்த அரசை நடத்த போதிய நிதி இல்லாமல் தமிழகம் மிகவும் பின் தங்கிய மாநிலமாக உருவாகி உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தபோதும், அந்த கருத்தை ஏற்க இந்த அரசு மறுத்தது. விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, நெசவுத்தொழில் முடக்கம், மின் வெட்டு என்று பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, பொங்கல் பொருட்கள் வழங்காமல் கருணை காட்டாத அ.தி.மு.க அரசின் இந்த செயல் ஏழை மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.
எதற்கு எடுத்தாலும் மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலின்படி என்று சொல்லிகொள்ளும் தமிழக அரசு, பொங்கல் பொருட்கள், மற்றும் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படிதான் செயல்பட்டதோ என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். "கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்". என்ற பழமொழிக்கு ஏற்ப செயல்படும் இந்த அரசின் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications