விஜயகாந்துக்கு தேர்தல் தேதியே தெரியலை, இவர் எல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்: ராமராஜன்
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நாடாளுமன்ற தேர்தல் தேதியே தெரியவில்லை. அவர் எல்லாம் ஒரு கட்சியின் தலைவர் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பெருந்துறையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக பிரச்சார கூட்டம் நடந்தது. அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

பிரதமர்
தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை பிரமதர் ஆனதில்லை. இம்முறை முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.

ப.சி., வாசன்
மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் ஏன் போட்டியிடவில்லை?. அவர்கள் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட கிடைக்காது.

விஜயகாந்த்
எப்பொழுதும் தெளிவாக பேசும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது மே மாதம் 16ம் தேதி நடக்கும் தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நடக்கும் தேதியே தெரியாத அவர் ஒரு மாநில கட்சியின் தலைவர். அவருக்கு ஜெயலலிதா தான் எதிர்கட்சி தலைவர் என்ற பதவியை அளித்தார். அவர் மட்டும் தனித்து போட்டியிட்டிருந்தால் ஒரு தொகுதி கூட கிடைத்திருக்காது.

ஆடு, மாடு
ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த ஆடு, மாடுகள் குட்டிகள் போடும். அதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? ரிப்பேர் தான் ஆகும்.

அதிமுக
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று அதை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமராஜன்.












Click it and Unblock the Notifications