நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்: விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் வாழ்த்து
சென்னை: கடந்த ஆண்டில் நாம் பட்ட கஷ்டங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டு முழுவதும் பட்ட கஷ்ட, நஷ்டங்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டிலாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கையோடு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம் என்று கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சரத்குமார் வாழ்த்து
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில், மீனவர்கள் உள்ளிட்ட தமிழர்களின் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்த நன்னாளில் நமது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாழ்வில் வளமையும், மகிழ்ச்சியும் நிறையும் வகையில் புத்தாண்டு அமைய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.