திமுக, அதிமுக கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகங்கள் - விஜயகாந்த் தாக்கு
சென்னை: திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் கட்டிய வீட்டிற்குள் புகுந்த கருநாகங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, தமாகா சார்பில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகங்கள்.

தி.மு.க. என்றால், தில்லு முல்லு கழகம், அ.தி.மு.க. என்றால் அனைத்து தில்லு முல்லு கழகம். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வேண்டுமா, இல்லை அதிமுக, திமுக. வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கும், சரி, முதல்வர் ஜெயலலிதாவிற்கும் சரி என்னை கண்டாலே பிடிக்காது.
அன்று நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர்தான். தமிழகத்தை கொள்ளையடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தற்போது தேர்தல் போர். தற்போது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் இது. இந்த தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயல்கிறார் என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், ஸ்டாலினின் எண்ணங்களும் நோக்கங்களுமே அவரை அழித்துவிடும். எங்கள் கூட்டணி மக்களுக்கு பின்னால் இருக்கிறது. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா கூறுவது அனைத்து சொத்தையும் கொள்ளையடித்தது போகத்தான்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தப்பு செய்தால் தட்டிக் கேட்க 5 பேர் உள்ளனர். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டணி தர்மத்தை கட்டிக்காப்போம்.
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை தருவோம். நாளை அல்லது நாளை மறுநாள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்












Click it and Unblock the Notifications