பஞ்சமி திதியில் உளுந்தூர்பேட்டையில் 27ம் தேதி விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டையில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் ராசிப்படி புதன்கிழமை, பஞ்சமி திதியில் அமிர்தயோகத்தில் உளுந்தூர்பேட்டையில் மனு தாக்கல் செய்யப் போகிறார் விஜயகாந்த்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் தயார் நிலையில் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர்.
29ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 24 தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 7 நாட்களும் மனுதாக்கல் செய்யலாம். இந்த 7 நாட்களில் 25ம்தேதியும் 29ம்தேதி வெள்ளிக்கிழமையன்றும் சுப முகூர்த்த தினங்களாகும்.
முதல்நாளான இன்று அரசியல் கட்சித்தலைவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டப்போவதில்லை. காரணம் இன்று பத்து மணிக்கு மேல் பிரதமை தொடங்குகிறது. சனிக்கிழமையான நாளையும் 1 மணிவரை பிரதமை திதி உள்ளது.
கருணாநிதி
திங்கட்கிழமையன்று 25ம் தேதி முகூர்த்த தினம் என்பதால் அன்றைய தினம் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவாலய வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளது.
கோவில்பட்டியில் வைகோ
அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நல்ல நாள் நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 25ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் மனு தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற 27ம் தேதி உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார். விஜயகாந்துக்கு 5ம் எண் ராசியானதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல பஞ்சமி திதியில் அமிர்த்தயோகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ஜெயலலிதா எப்போது?
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனுதாக்கல் செய்யும் 25ம்தேதியன்றே அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.