3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.. கள்ள ஓட்டுக்களை தடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்
தஞ்சை உள்பட 3 மூன்று தொகுதி தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல்களில் கள்ள ஓட்டுகளை யாரும் பதிவு செய்யாத வகையில் தடுத்து முறையான தேர்தலாக நடத்திட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இன்று நடைபெறும் தேர்தலில் தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறாது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.

வாக்குப்பதிவில் எவ்வித முறைகேடுகளும் நடக்காவண்ணம், போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சமமாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனைகளை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
தே.மு.தி.க. சார்பாக மூன்று தொகுதி வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியாரையும், தேர்தல் அதிகாரிகளையும் சந்தித்து அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தொகுதி முழுக்க பணம் வினியோகம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக தேர்தலில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் விதிமுறைகள் வந்ததாக கூறி வாகனங்களை பரிசோதிப்பதாலோ, வாக்குச்சாவடிகளில் கேமரா வைப்பதாலோ, மத்திய ராணுவப்படை அணிவகுப்புகளோ, தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற எந்த செயல்பாடுகளும் முறைகேடுகளை தடுக்க முடியாமல் கண்துடைப்பு நாடகங்களே அரங்கேற்றி வருகிறது.
எனவே இந்த தேர்தல்களில் கள்ள ஓட்டுகளை யாரும் பதிவு செய்யாத வகையில் தடுத்து முறையான தேர்தலாக நடத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications