ஜெ. முதல்வராவதைத் தடுக்க எதற்கும் தயாராகி விட்டார் விஜயகாந்த்?
சென்னை: விஜயகாந்த் எதற்கும் தயாராகி விட்டார் போல. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி விடக் கூடாது. இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற நிலைக்கு அவர் வந்து விட்டதாக தெரிகிறது.
வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு விஜயகாந்த் பேசி வருவது அவரது கட்சியினருக்கு மட்டுமல்லாமல், அவரை கூட்டணிக்குள் இழுக்கக் காத்துக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் கூட குஷி தருவதாக உள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அமையப் போகும் வலுவான கூட்டணியை வைத்துத்தான் ஜெயலலிதாவை எதிர்க்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி பலமாக இருக்குமா அல்லது பலவீனமாக இருக்குமா என்பதைச் சொல்வ முடியும்.

கூட்டணி ஏற்பட விடாமல் தடுக்கும் அதிமுக
தற்போதைய நிலையில் தமிழகத்தில் அத்தனை பேரும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே அதிமுகவின் ஆசை மற்றும் லட்சியம். அப்போதுதான் தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று அதிமுக கருதுகிறது. எதார்த்தமும் அதுதான்.

கூட்டணி வருமா
இதனால்தான் பலமான எதிர்க்கட்சிக் கூட்டணி ஏற்பட்டு விடாமல் தடுக்கும் முயற்சிகள், நடவடிக்கைகளில் அதிமுக தீவிரமாக உள்ளது.

வலைவிரிப்பு
இதை மனதில் கொண்டே யாரும் யாரோடும் கூட்டணி சேர்ந்து விடாத வகையில் சில பல வேலைகளை ஆளுங்கட்சி பகிரங்கமாகவும், ரகசியமாகவும் செய்வதாக கூறுகிறார்கள்.

திமுக - மதிமுக
தேமுதிகவை கூட்டு சேர்க்க திமுக நீண்ட காலமாகவே முயற்சித்து வருகிறது. ஆனால் விஜய காந்த் பிடி கொடுக்காமல் இருக்கிறார். அதேபோல தனது மக்கள் நல கூட்டு இயக்கத்தின் பக்கம் விஜயகாந்த்தைக் கொண்டு வர வைகோவும் முயற்சிக்கிறார். ஆனால் அதற்கும் பகிரங்கமாக விஜயகாந்த் எந்தப் பதிலும் சொல்லாமல் உள்ளார்.

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் பேச்சு
இந்த நிலையில் தனது தொகுதியான ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் கடந்த 23ம் தேதி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

என்ன பேசினார் விஜயகாந்த்
அப்போது விஜயகாந்த் பேசுகையில், மணலூர்பேட்டையில் பாலம் கட்ட மத்திய அரசிடம் 20 கோடி ரூபாய் நிதி பெற்றுக்கொடுத்துவிட்டேன். இனி பாலம் கட்டுவதும் கட்டாததும் ஜெயலலிதா கையில்தான் இருக்கிறது மக்களே. அடுத்ததாக, ஜெயலலிதா முதல்வராவதைத் தடுக்க எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்வான் இந்த விஜயகாந்த் என்றார் விஜயகாந்த்.

எதுக்கும் ரெடி
விஜயகாந்த்தின் இந்தப் பேச்சுக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக அனைவரும் எடுத்துக் கொள்ளும் அர்த்தம் - ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி விடாமல் தடுக்க என்ன மாதிரியான உடன்பாட்டுக்கும் இறங்கி வரத் தயார் என்று விஜயகாந்த் மறைமுகமாகக் கூறியுள்ளனர் என்கிறார்கள்.
என்ன செய்யப் போறாரோ...!












Click it and Unblock the Notifications