விஜயகாந்துக்கு சொந்த காசில் சூனியம் வைக்க அல்லாடும் தேமுதிக நிர்வாகிகள்!
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலின் போது கூட்டணி தொடர்பான விஜயகாந்த் எடுத்த முடிவுகளால் சிதறு தேங்காயாக தேமுதிக உடைந்தது. விஜயகாந்தும் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு டெபாசிட்டையே பறிகொடுத்தார்.
இந்த படுதோல்வியைத் தொடர்ந்து பல மாதங்களாக மவுனமாக இருந்து வருகிறார் விஜயகாந்த். தஞ்சாவூர் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாகவும் 'ரகசியமாக' ஆலோசனை நடத்தி வருகிறாராம் கேப்டன்.
அப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனராம். உளுந்தூர்பேட்டையில் விட்ட டெபாசிட்டையாவது திருப்பரங்குன்றத்தில் வாங்கி ஆறுதலடைவோம் என உசுப்பேற்றி வருகின்றனராம் நிர்வாகிகள்.
ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவோ, எதுக்கு இந்த விஷப் பரீட்சை... எதாவது பலி ஆடாக ஒருவரை நிறுத்திவிட்டுப் போகலாம் என்கிறாராம். அதே நேரத்தில் தோற்றுப் போக எதுக்கு போட்டியிட வேண்டும் என 3 தொகுதி நிர்வாகிகளும் ஓடி பதுங்குகிறார்களாம்!
கண்ணாமூச்சி ஆட்டம் எப்பதான் முடியுமோ!