பார்க்காதே!... படிக்காதே!!.... பேசாதே!!!: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் போட்ட மூன்று கட்டளைகள்
சென்னை: கேப்டன் டிவியைத் தவிர மற்ற எல்லா டிவிகளும் பொய் செய்திகளைத்தான் சொல்கின்றன அவற்றை எல்லாம் தேமுதிக தொண்டர்கள் பார்க்க வேண்டாம் என்று அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலைச் சந்தித்தது. கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்று போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
எனினும் ராஜ்யசபா எம்.பி பதவியும், அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அதற்கும் வாய்ப்பின்றி போகவே அப்செட் ஆனார் விஜயகாந்த்.
தொண்டர்களுடன் கேப்டன்
லோக்சபா தேர்தல் முடிவினை மறந்துவிட்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு தற்போது தொண்டர்களை சந்தித்து வருகிறார். தொண்டர்கள் மத்தியில் பேசும் விஜயகாந்த் முக்கியமாக மூன்று விசயங்களை வலியுறுத்தி வருகிறாராம்.
பார்க்கவே பார்க்காதே
டிவிகளில் எல்லாம் பொய் செய்திகளைத்தான் சொல்கின்றனர். எனவே வேறு எந்த டிவிகளையும் பார்க்க வேண்டாம். நீங்கள் வளரவேண்டும் என்றால், கட்சி வளரவேண்டும் என்றால் கேப்டன் டிவியை மட்டுமே பாருங்கள் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
படிக்கவே படிக்காதே
அனைத்து நாளிதழ்களும், வார இதழ்களும் தேமுதிகவை அழிக்கும் செய்திகளைத்தான் போடுகின்றன. எந்த பத்திரிகைகளையும் படிக்காதீர்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
பேசவே பேசாதே
அடுத்த கட்சி விவகாரங்களைப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நம் கட்சியைப் பற்றி பேசுங்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு டெரர் கட்டளைகளைப் போட்டிருக்கிறாராம்.
இதெல்லாம் நடக்குமா கேப்டன்?