சிங்கப்பூரிலிருந்து ரிட்டர்ன் ஆகும் விஜயகாந்த்.. சனிக்கிழமை ராத்திரி வரக் கூடுமாம்!
சென்னை: சிகிச்சைக்காக சிங்கப்பூர் போயுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை ராத்திரி விமானத்தில் சென்னை திரும்பக் கூடும் என்கிறார்கள்.
சமீபத்தில்தான் சிங்கப்பூர் போனார் விஜயகாந்த். சிகிச்சைக்காக அவர் போனதாக கூறப்படுகிறது. அவர் போன விவரம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு என்ன பிரச்சினை என்பதும் கூட தெரிவிக்கப்படவில்லை. அவர் சேர்ந்துள்ள மருத்துவமனை விவரம் கூட வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் சனிக்கிழமை இரவு தாயகம் திரும்பக் கூடும் என்று கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து விட்டதால் விஜயகாந்த் திரும்புகிறாராம்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு தேமுதிக
லோக்சபா தேர்தலில் தேமுதிக பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளை மாவட்ட வாரியாக போய்ப் பார்க்க ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த்.

உங்களுடன் நான்
உங்களுடன் நான் என்ற தலைப்பில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. தோல்விக்கான காரணம் குறித்தும் அப்போது தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த்.

திடீர் நெஞ்சு எரிச்சல்
இந்த நிலையில் திடீரென விஜயகாந்த்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடைசியில் அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் சேர்ந்த அதே நாளில்தான் பத்திரிக்கையாளர் சோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் சேர்ந்தனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூட ஏற்பட்டது.

மனைவியுடன் சிங்கப்பூர் பயணம்
இந்தசூழ்நிலையில் திடீரென ஜூலை 13ம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார் விஜயகாந்த். சிகிச்சைக்காக அவர் போனதாக கூறப்பட்டது.

சனிக்கிழமை திரும்புகிறார்
தற்போது அவர் சிகிச்சை முடிந்து சனிக்கிழமை இரவு சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுவும் கூட அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

சட்டசபையில் இல்லை
தற்போது சட்டசபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications