ஓபிஎஸ் செய்ய வேண்டியதை "கேப்டன்" செய்றார்... : ஈவிகேஎஸ் பாராட்டு
சென்னை: மக்களுக்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்ய வேண்டிய வேலையை, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்து வருகிறார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை பிரதமரைச் சந்திக்க உள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது தொடர்பாக முதலில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார் விஜயகாந்த். அங்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சிதம்பரம், திருநாவுக்கரசு மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்வர் பன்னீர்செல்வம் மேகதாது அணை குறித்த பிரச்னையில் அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தமிழர் பிரச்னை தொடர்பாக அவர் மோடியை சந்திக்கவில்லை என்பதால் மற்றவர்களை அழைத்துச் செல்லவில்லை.
இந்நிலையில், பன்னர்செல்வம் செய்ய வேண்டிய வேலையை, விஜயகாந்த் தற்போது செய்து வருகிறார். பிரதமருடன் பேச அனைத்து கட்சியினரை அவர் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பில் ஒருவர் விஜயகாந்த்துடன் சென்று, பிரதமர் மோடியை சந்திப்பார்,' என்றார்.












Click it and Unblock the Notifications