யாருடன் கூட்டணி வைக்கலாம்? ஆண்டாள் கோவிலில் உத்தரவு கேட்ட விஜயகாந்த்!
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒருமணிநேரம் சிறப்பு பூஜைகள் செய்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அப்போது மாநாடு அழைப்பிதழையும், கூட்டணி சேரப்போகும் கட்சியின் பெயரையும் கவரில் வைத்து வழிபட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும், ஜோதிடம், இறை நம்பிக்கை கொண்டவர்கள்தான். ஜோதிடர்களின் ஆலோசனைப் படியே எந்த செயலையும் செய்வார் முதல்வர் ஜெயலலிதா. அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்தும் குலதெய்வத்தை கும்பிட்ட பின்னரே முக்கிய முடிவுகளை எடுப்பார்.
நடிகராக இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்த விஜயகாந்த் அரசியல் கட்சித்தலைவராக மாறிய பின்னரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக குலதெய்வத்தை தரிசனம் செய்வார்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பாஜக உள்ளிட்ட பல கட்சியினரும் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றன. இதுபோன்ற ஒரு சூழலில் உரிய முடிவெடுக்க குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார் விஜயகாந்த்.

குலதெய்வ வழிபாடு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் பகுதியில் அமைந்துள்ள 'வீர சின்னம்மாள்' குலதெய்வக் கோயிலுக்கு தனது மனைவி பிரேமலதா உடன் சென்ற விஜயகாந்த், அங்கே பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

ஆண்டாள் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு நேற்று மாலையில் பிரேமலதா உடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். நேரடியாக மூலஸ்தானம் சென்ற அவர் 10 நிமிடங்கள் நின்றவாறே சுவாமி தரிசனம் செய்தார்.

1008 அர்ச்சனை
விஜயகாந்தும், பிரேமலதாவும் மூலஸ்தானம் முன்பு அமர்ந்து, ஸ்ரீஆண்டாளுக்கு பிடித்த 1008 தாமரை, அரக்கு புடவை, கற்கண்டு சாதத்துடன் ஷைஸ்ராநாம அர்ச்சனை செய்தனர். சுமார் 55 நிமிடங்கள் இந்த அர்ச்சனை நடைபெற்றது.

வேட்பாளர் பட்டியல் ரெடி?
காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாட்டின் அழைப்பிதழை வைத்து பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஒரு பெரிய கவர் சுவாமி முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அந்தக் கவரில் வேட்பாளர் பட்டியல் இருப்பதாக தேமுதிகவினர் கிசுகிசுத்தனர். அதே நேரத்தில் கூட்டணி சேரப்போகும் கட்சியின் பெயரை கவருக்குள் வைத்து விஜயகாந்த் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

தங்க கோபுர தரிசனம்
ஆண்டாளை தரிசனம் செய்த பின்னர் விஜயகாந்த் தங்க கோபுரம், வடபத்தர சயனர் கோவில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் குவிந்திருந்த செய்தியாளர்களை சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்துவிட்ட அவர் காரில் ஏறி சென்று விட்டார்.

பக்தர்கள்
பூஜை நடைபெற்றுக் கொண்டுருந்த நேரத்தில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ஆனால் விஜயகாந்த் மூலஸ்தானத்தின் முன்பு அமர்ந்திருந்ததாலும், அவரைச் சுற்றி ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்திருந்ததாலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலாமல் திரும்பிச் சென்றதாக தெரிகிறது.
பொதுவாக ஷைஸ்ராநாம அர்ச்னை கொடிமரத்தின் அருகேயுள்ள கெஜலட்சுமி கோவில் முன்பு யாருக்கும் இடையூறு இன்றி நடைபெறும். ஆனால் அரசியல் தலைவர் என்பதால் மூலஸ்தானத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கூட்டணியை அறிவிப்பார் விஜயகாந்த்?
குலதெய்வ கோவிலிலும், ஆண்டாள் கோவிலிலும் விஜயகாந்த் தரிசனம் செய்திருப்பதால், காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications