மறைந்தார் இப்ராகிம் ராவுத்தர்.. கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த்
சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு அவரது நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். கடைசியாக இவர், "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார்.
இருதயம் மற்றும் சிறுநீரக கோளாரால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "நண்பா நீ எழுந்து வருவாய்" என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ராவுத்தர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு அவரது நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அவருடன் பிரேமலதா சுதீஷ் ஆகியோரும் சென்றிருந்தனர். அதேபோல், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், பேரரசு உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.