தூசி தட்டப்படுகிறது எம்.ஜி.ஆர் வேன்.. பிரசாரத்திற்கு பயன்படுத்த விஜயகாந்த் முடிவு
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய தேர்தல் பிரசார வேனை, வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த், அவரின் மனைவி ஜானகி அம்மையாருடனும் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். இந்த நட்பை பயன்படுத்தி, 1996ம் ஆண்டு ஜானகியிடமிருந்து எம்.ஜி.ஆர் நினைவாக அவரது வேனை எனக்கு வழங்குகள் என்று கேட்டு விஜயகாந்த் அதை பெற்றுக்கொண்டார்.
2005ம் ஆண்டு, தேமுதிகவை துவக்கிய விஜயகாந்த், மதுரையில் நடந்த தனது கட்சி மாநாட்டிற்கு இந்த பிரசார வேனில் மேடைக்கு வந்தார். விருதாச்சலம் தொகுதியில் பிரசாரத்தின்போது அந்த வேனில், சில இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இதன்பிறகு, மீண்டும் ஷெட்டுக்கே சென்றது அந்த வேன். வேனை கேட்டுப்பெற்ற விஜயகாந்த், அதை முறையாக பராமரிக்கவில்லை என ஊடகங்களில் சில தினங்கள் முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், வேனை தூசி தட்ட விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், எம்.ஜி.ஆரை போன்று, தமிழகத்தில் ஆட்சியை பிடித்து கோலோச்ச, அந்த வேன் சென்டிமென்ட் உதவும் என்பது விஜயகாந்த்தின் எண்ணம்.