110 எனக்கு பிடிக்காத நம்பர்: ரமணா பாணியில் விஜயகாந்த் பஞ்ச்
சென்னை: மன்னிப்பு... தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை என்று ரமணா படத்தில் விஜயகாந்த் சொல்லும் வசனம் ரொம்ப பிரபலம். அதே பாணியில் பிரச்சார மேடையில் பேசும் போது, 110 எனக்கு சட்டசபையில் பிடிக்காத நம்பர் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் பங்கேற்கும் பொதுக்கூட்டமோ, செய்தியாளர்கள் கூட்டமோ எதுவென்றாலும் காமெடிக்கும் பொழுது போக்கிற்கும் பஞ்சமிருக்காது. மேடையில் அமர்ந்து கொண்டே ரசிகர்களிடம் சைகையில் பேசுவார். கேள்வி கேட்கும் செய்தியாளரை நாக்கை துருத்தி முறைப்பார்.
சில தொண்டர்கள் கொடியை உயர்த்தியும், விசிலடித்தும் விஜயகாந்தை உசுப்பேற்றுவார்கள். அவர் தனது விரலை உயர்த்தி உஸ் உஸ் என்று சொல்லி அமைதிப்படுத்துவார்.
கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் விஜயகாந்த், கொள்ளைக்காரர்களை விரட்ட தர்மயுத்தம் நடக்கிறது என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொண்டரின் கேள்வி
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளதா என்று ஒரு தொண்டர் கேள்வி எழுப்பினார். நம்பிக்கைதானே வாழ்க்கை, நம்பிக்கையின் அடிப்படையில்தானே அத்தனை பேரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

நிச்சயம் ஜெயிப்போம்
நிச்சயம் ஜெயிப்போம் என்கிற நம்பிக்கையில் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் கூறினார்.மக்கள் நலக் கூட்டணிக்கும் தேமுதிக கூட்டணிக்கும் இப்போது தொகுதிகள் சமமாக பிரிக்கப்பட்டு உள்ளன என்றும், இதை தாம் கூறவில்லை, திருமாவளவன் கூறியதை திரும்ப நான் கூறுகிறேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.

110 எனக்கு பிடிக்காத நம்பர்
விஜயகாந்த் பேசிக்கொண்டிருக்கும் போதே தொண்டர் ஒருவர் 110 என்று கூச்சலிட்டார். அப்போது அந்த தொண்டரை நோக்கி என்னது? 110ஆ என்பது சட்ட சபையில் எனக்குப் பிடிக்காத எண் என்று அதிரடியாகக் கூறினார்.

ஆசிரியர் விஜயகாந்த்
விஜயகாந்த் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் இடையிடையில் தமது தொண்டர்களைப் பார்த்து ஆசிரியர் போல உஸ் உஸ் என்று வாயின் மேல் விரல் வைத்து அமைதிக் காக்க சொல்வதும், கண்களை உருட்டுவதும் போன்ற அபிநய நிகழ்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. அவ்வப்போது கைக்கு சிக்கியவர்களை அடி வெளுத்தும் வாங்குகிறார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications