சோனியா, ராகுலை சந்திக்க விஜயகாந்த்துக்கு 'நோ கால்ஷீட்'!
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்கை தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் தடபுடலாகப் பார்த்து விட்ட விஜயகாந்த்துக்கு, சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் மட்டும் சந்திக்கவே வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது.
இருவரையும் சந்திக்க டெல்லியில் காத்திருந்த அவர் வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் மாதிரி சோகத்துடன் சென்னைக்குத் திரும்பியுள்ளார். சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்.
திடீரென தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் டெல்லி போன விஜயகாந்த், அங்கு பிரதமரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், நீங்கள் முதல்வரானால் எல்லாப் பிரச்சினையும் தீரும் என்று பிரதமர் சொன்னார். அதைக் கேட்டபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சந்தோஷத்துடன் கூறினார்.

ஆனால் அதற்குப் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்யா, ஏய். இந்தா பாரு.. என்று பழைய விஜயகாந்த்தாக மாறி டென்ஷனாகி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டார்.
அதன் பின்னர் டெல்லியிலேயே தங்கியிருந்த விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க முடிவு செய்து காத்திருந்தார். ஆனால் அவர்களைச் சந்திக்க கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெரும் ஏமாற்றமடைந்த விஜயகாந்த் இன்று தனது மனைவி மற்றும் கட்சியினர் புடை சூழ சென்னை திரும்பினார். இங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்கள் விஜயகாந்த்தைச் சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிப்பேன் என்று தெரிவித்தார் விஜயகாந்த். விரிவாக அவர் பேட்டி அளிக்கவில்லை.
அனேகமாக காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வர மாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. பழைய பாணியில் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளை அவர் பிரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications