அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளில் 2வது முறையாக அரெஸ்ட் ஆன விஜயகாந்த்
சென்னை: மதுவிலக்கு கோரி சென்னையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தேமுதிக ஆரம்பித்து 10 ஆண்டு காலத்தில் 2வது முறையாக போராட்டம் நடத்திக் கைதாகியுள்ளார் விஜயகாந்த்
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் அனுமதி அளிக்காதநிலையில் தேமுதிகவினர் ஏற்கனவே அறிவித்தபடி இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு முதல் தலைமைச் செயலகம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதால் விஜயகாந்த், பிரேமலதா உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

தேமுதிக 10 ஆண்டு
மதுரை மாவட்டம் திருநகரில் கடந்த 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் முதன்முறையாக தேதிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்தார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

எம்.எல்.ஏ விஜயகாந்த்
கட்சி ஆரம்பிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே தேர்தலை சந்தித்தது தேமுதிக. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, முதல்முறையாக எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்டார்.

எதிர்கட்சித்தலைவர்
2011ம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவர் ஆனார். அரசுக்கு எதிராக பல போராட்டங்களையும் நடத்தினார் விஜயகாந்த்

2வது முறையாக கைது
ஆவின் பால் உயர்வு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ள விஜயகாந்த் 2012ம் ஆண்டு ஒரு முறை கைதாகியுள்ளார். இந்த நிலையில் பூரண மதுவிலக்கு கோரி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்திய விஜயகாந்த், தனது மனைவி, மைத்துனர் சகிதமான ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுவாங்களா? மாட்டாங்களா?
சினிமாவில் போலீசாக நடித்து அனைவரையும் கைது செய்தே பழக்கப்பட்ட விஜயகாந்த் அரசியல்வாதியாக முதன்முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். வெளியே விடுவாங்களா? உள்ளேயே வச்சு உதைப்பாங்களா? தெரியலையே என்று அவரே அவருக்குரிய பாணியில் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications